search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் முருகன்"

    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா நடந்தது.
    • ஆண்டுக்கு 3 முறை சூரசம்ஹார லீலை நடைபெற்று வருகிறது.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சுமார் 6½ அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்பம் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.

    தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், புத்தம் புதிய வஸ்திரத்தாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு முருகப்பெருமான், அம்பாளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வந்து தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.

    காலை 10.57 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்பாளுடன் சுவாமி புறப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தெப்பத்துடன் இணைக்கப்பட்ட வடத்தினை பிடித்து இழுத்ததை ெதாடர்ந்து, தெப்ப உற்சவம் தொடங்கியது.

    இதே போல இரவில் மின்னொளியில் வாணவேடிக்கைகள் முழங்க தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

    இரவிலும் தெப்பத்தில் வீற்றிருந்து தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா நடந்ததால் ஏராளமாக பக்தர்கள் குவிந்து, சாமி தரிசனம் செய்தனர். .

    நேற்று தெப்பத் திருவிழா முடிந்ததும் தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இந்த கோவிலை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3 முறை சூரசம்ஹார லீலை நடைபெற்று வருகிறது.

    ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழாவின்போது பிரமாண்டமாக சூரசம்ஹாரம் நடக்கிறது. தெப்பத்திருவிழா, பங்குனி பெருவிழாவிலும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • மாலை 6 மணியளவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகிறார்.
    • தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று (திங்கட்கிழமை) தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெப்பத்திருவிழா நடக்கிறது. இதனையொட்டி ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் முழுவதுமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    மேலும் 15 அடி உயரம் கொண்ட தெப்பக்குளத்தில் 6½ அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் சுவாமி உலா வருவதற்கு ஏற்ப 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்ப மிதவை தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    திருவிழாவையொட்டி இன்று காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தயாராகும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல மீண்டும் மாலை 6 மணியளவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் தெப்ப மிதவை தேரில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவர்களில் சந்தனம், குங்குமத்தை பூசுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்
    • தூணில் உள்ள சிற்பங்களை பாதுகாப்பதில் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன. ஒவ்வொரு சிலையும் ஒரு கிழமையில் வழிபடக்கூடிய வகையில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களுக்கு குங்குமம், சந்தனத்தை தடவி தங்களது பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

    அதை ஒருபுறம் வரவேற்றாலும், புராணகாலத்தின் வரலாற்றை உணர்த்தும் சிற்பங்களின் அழகுதன்மையும், சிறப்பும் கொஞ்சம், கொஞ்சமாக மங்கிவிடுகிறது. நாளடைவில் தூணும், சிற்பங்களும் சிதலமடைய கூடும். இதனையொட்டி அவ்வப்போது கோவில் நிர்வாகம் சிற்பங்களில் அழுக்கு, மாசு மற்றும் சந்தன பூச்சை தேய்த்து மெருகியேற்றி வருகிறார்கள்.

    அதேபோல நேற்றுகோவில் துணை கமிஷனர் சுரேஷ் உத்தரவின்பேரில் தூணில் உள்ள சிலைகள் யாவும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும் கோவில் தூணில் உள்ள சிற்பங்களை பாதுகாப்பதில் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பக்தர்கள் குங்குமம், சந்தனத்தை சிற்ப சிலைகளில் பூசாமல் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

    • 30-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.
    • 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது.

    தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பைபுல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வருகிற 30-ந்தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

    முக்கிய நிகழ்ச்சியான வருகிற 31-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் அன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி மண் பானையில் செய்த பொங்கல் படைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி நேற்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்திய கீரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு 5 மண் பானைகளில் பொங்கல், கரும்பு வைத்து சிறப்பு தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு 5 மண்பானைகளில் பொங்கல், கரும்பு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் தனி சன்னதிகளில் உள்ள சண்முகர், செந்தில் ஆண்டவர், கோவர்த்தனாம்பிகை, அன்னபூரணி, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நடராஜர் சனீஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம் உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் மண்பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    • நாளை தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
    • சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு தைப்பொங்கல் நாளில் ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. அதன்படி நாளை(ஞாயிற்றுக்கிழமை) தைப்பொங்கல் நாளில் 5 பெரிய மண்பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.

    பிறகு உற்சவர் சன்னதியில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க பொங்கல் வைத்த மண்பானைகள், மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை மூங்கில் தட்டில் வைத்து எடுத்து செல்லப்படுகிறது.

    இதனையடுத்து கருவறையில் தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்திய கீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகளிலும் பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும் பொங்கல் படைத்து பூஜை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 31-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார். அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 30-ந்தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் ஓரத்தில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. இருப்பினும் தெப்ப மிதவை வலம் வருவதற்கு வசதியாக கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் தெப்பக்குளம் மேல்புறத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டாரை இயக்கி அதன்மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கோவிலின் கருவறையில் பவளக்கனிவாய் பெருமாள் அமைந்துள்ளார்.
    • இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் நிறைவடைகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வருவது வழக்கம். இந்த கோவிலின் கருவறையில் பவளக்கனிவாய் பெருமாள் அமைந்துள்ளார்.

    மீனாட்சிஅம்மன்-சுந்தரேஸ்வரருக்கு தாரைவார்த்து கொடுப்பவரே பவளக்கனிவாய் பெருமாள் தான். ஆகவே இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று மாலையில் வழக்கம் போல கோவிலுக்குள் மடப்பள்ளியையொட்டி உள்ள பெரியகதவில் நாமம் போட்டு மலர்களால்அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.

    இந்தநிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க பெரிய கதவு (சொர்க்கவாசல்) வழியாக பவளக்கனிவாய்பெருமாள் எழுந்தருளி கோவிலுக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து மார்கழி மாத கார்த்திகை நேற்று மாலை 5.30மணியளவில் தொடங்கியது.மேலும் இன்று (3-ந்தேதி) மாலை 6 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் நிறைவடைகிறது. இதனையொட்டி வழக்கம் போல நேற்று மார்க்கழி மாத கார்த்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின்துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என்று தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் முதல்முறையாக மார்கழி 1 முதல் மார்கழிமாதம் முழுவதுமாக தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது:- மார்கழி மாதத்தில் 500 பக்தர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் சமைத்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதமும் சராசரி 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது நேற்று முதல் வருகிற 2023-ல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை (மார்கழி மாதம் முழுவதும்) தினமும் அதி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.

    • அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது.

    திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிபெருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா ஆகிய 3 திருவிழாக்களிலும் கொடியேற்றத்துடன் நடப்பது போலவே இந்த 3 திருவிழாக்களிலும் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது தனிசிறப்பு.

    திருக்கார்த்திகை திருவிழாவான நேற்று வழக்கம்போல முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.

    மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிகிறார்கள்.
    • இன்று காலை 11.15 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் ரதவீதிகளில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து தரிசனம் செய்கிறார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    இதற்காக உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள தீபமண்டபத்தின் நாலாபுறமும் வெள்ளை அடிக்கப்பட்டு சிவப்பு வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. மேலும் தீபத்துக்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை, 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் தயாரான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

    இதற்கிடையே நேற்று திருவண்ணாமலையில் இருந்து தீப நிபுணா் குழுவினர் 4 பேர் வந்து திரியை நெய்யில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று திருக்கார்த்திகை தினம் என்பதால் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்களிடையே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரிய ரதவீதியில் கோவில் அலுவலகம் அருகே 2 பிரிவாக தடுப்பு ஏற்படுத்தி தர்ம தரிசனம் மற்றும் ரூ.100 செலுத்தக்கூடிய கட்டண சிறப்பு தரிசனம் என்று 2 வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கமான பிரதான வழியில் கருப்பணசுவாமி சன்னதி அருகே கோவிலுக்குள் செல்வதற்கும், மடப்பள்ளியையொட்டி பெரிய கதவு வழியாக வெளியேறுவதற்கு உள்ளே - வெளியே என்று ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் மற்றும் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    • வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறகூடிய பங்குனி பெருவிழாவில் கிரிவல பாதையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதற்காக கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தை மாதத்தில் தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

    இதற்காக பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து கீழ ரதவீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி வழியாக தேர்வலம் வரும். அதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். இத்தகைய நிகழ்வானது காலம், காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 6-ந்தேதி திருக்கார்த்திகை நாளாகும்.

    ஆகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பதினாறுகால் மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேரின் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டத்திற்கு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.

    ×